(நா.தனுஜா)

அண்மைக் காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறைவிடயமாக அல்லவா கருதப்பட வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜலனி பிரேமதாஸவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் அண்மைக் காலமாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவந்தன.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தைக் கண்டிக்கும் விதமாக சர்வதேச ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களை ஊக்குவிக்கும் 'சேன்ஜ்' என்ற பிரபல சிவில் அமைப்பின் ஊடாக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக 'பெண்களின் மகப்பேற்றுச் சுதந்திரம் என்பது அரசியலுக்கான ஓர் ஆயுதம் அல்ல என்பதைப் பிரதமருக்குச் சொல்லுங்கள்' என்ற தலைப்பில் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன், அதில் சுமார் 500 பேர் வரையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதுமாத்தரமன்றி தனிநபரொருவரின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை அரசியல் பிரசார மேடைகளில் பேசுபொருளாக்குவதை கண்டித்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இத்தகையதொரு பின்னணியிலேயே மங்கள சமரவீரவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தை கண்டனம் செய்யும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'குழந்தைகள் இல்லாமையின் காரணமாக நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவை விடவும் தகுதி குறைந்த தலைவரா? அண்மைக் காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறைவிடயமாக அல்லவா கருதப்பட வேண்டும்?' என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.