(அஸ்லம் எஸ்.மௌலானா)

இந்நாட்டில் முஸ்லிம்கள் பிள்ளை பெறுவதற்கும் சுதந்திரம்
இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மருதமுனை கடற்கரை வெளியரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்கள் முன்னிலையில் ஓய்வுபெற்ற காதி நீதிபதி முஹம்மட் ஹம்தூன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"கருணா அம்மான் எமது கல்முனை மண்ணுக்கு வந்து நின்று கொண்டு முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றார். இப்போது கடைசியில் முஸ்லிம்கள் ஜப்பான் குஞ்சு போன்று குழந்தைகள் பெத்துத் தள்ளுவதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களை மாத்திரமல்ல, பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்களுக்கெதிராக தூண்டி விடுவதற்கு கருணா முயற்சிக்கின்றார்.

அவ்வாறென்றால் இந்நாட்டு முஸ்லிம்கள் பிள்ளைகள் பெறுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்று கேட்க விரும்புகின்றேன்.

கல்முனையில் இயங்கும் தமிழ் இளைஞர் சேனாவின் அனுசரணையில் இங்கு வந்து தேர்தலில் குதித்துள்ள கருணா, இந்த மண்ணை கலவர பூமியாக மாற்றுவதற்கே முனைப்புக் காட்டி வருகின்றார். கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, சமூகக் கட்டமைப்பு என்று எல்லாவற்றையும் சிதைத்து, சீரழிக்கும் திட்டத்துனேயே அவர் இங்கு களமிறங்கியுள்ளார்" என்றும் ஹரீஸ் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் எம்.பி.க்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அப்துல் வாசித் ஆகியோருடன் கட்சியின் தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் அமீர், எம்.எஸ்.உமர் அலி, மு.கா. எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்), பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.முஸ்தபா, மருதமுனை 03ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளர் ஏ.எம்.நிலாம் ஆகியோரும் உரையாற்றினர்.

அத்துடன் கட்சியின் மருதமுனை முக்கியஸ்தர்களான எம்.ஐ.எம்.ஆரிப், அப்துல் சத்தார், அம்ஜத் மஜீத், எம்.சதக்கத்துல்லாஹ் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பெருந்திரளான பொது மக்களும் இப்பிரசார கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.