கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள் திறக்கும் திகதியை தற்போதைய நிலையில் உறுதியாக குறிப்பிடமுடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் உலக சுகாதார தரப்பினரது பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்பட்டே விமான நிலையம் மீள் திறக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய சர்வதேச நாடுகளில் வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது

விமான நிலையம் மீள் திறத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சுற்றுலா சேவை கைத்தொழில் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செலுத்துகிறது. பூகோள மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால், சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதற்கும் , அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்கும் சுகாதார தரப்பினது ஆலோசனைகளுக்கு அமைய பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

காலவரையறையின்றி மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இம்மாதம் திறப்பதற்கு எதிர்பார்த்திருந்தோம். இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சிலும், சிவில் விமான சேவைகள் பிரிவிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.

கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக பரவலடையும் அபாயகராமான கட்டத்தை நாம் கடந்துள்ளோம். ஆனால் சர்வதேச நாடுகள் ஏதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுகிறார்கள். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் விமான நிலையத்தை எப்போது திறப்பது என உறுதியாக குறிப்பிட முடியாது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் துரிதமாக இடம் பெற்று வருகின்றன.

அடுத்த மாதத்தின் நடுப்பகுதியளவில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.