இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காகக் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியைப் பொற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் எந்தவொரு கட்சியும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுமாக இருந்தால், அது குறித்த கட்சிக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்குவதாக அமையும் என்று பல்வேறு அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்தல் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் இட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் தீமைகளின் மூலவேரை ஆராய்ந்து பார்த்தால் அவற்றை கடந்த 1956,1970,1977 மற்றும் 2010ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட அரசாங்கங்களுடன் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. 

எனவே எமது கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே நாட்டின் அனைத்து மக்களையும் உண்மையானதொரு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப இந்தப் பொதுத்தேர்தல் வெற்றியை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.