விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஜேர்மனியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சியான 'எதிர்கால ரஷியா' கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அந்நாட்டு ஜனாதிபதி புடினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான அலெக்சி நவல்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளார்.

ஏற்கனவே, அரச ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், புடினை எதிர்த்து போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் இருந்து விமானம் மூலம் அலெக்சி நவல்னி கடந்த வியாழக்கிழமை மொஸ்கோ சென்று கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கத்தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அவர் சுயநினைவு இழந்தார்.

அதை அடுத்து அவர் சென்றுகொண்டிருந்த விமானம் ரஷியாவின் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், கோமா நிலைக்கு சென்றார்.

டோம்ஸ்க் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் நவல்னி டீ அருந்தினர் என்றும், அந்த டீயில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் கூறினார்.

நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், இந்த சதிக்கு பின்னால் புடினின் அரசு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் தீர்க்கமாக நம்புகின்றனர்.

இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்கள் நவல்னி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவொரு உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதி அளித்ததோடு, என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த ரஷியாவை வலியுறுத்தினர்.

மேலும் நவல்னிக்கு ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சாரிட் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய ஜேர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் முன்வந்தது.

இந்த வைத்தியசாலை வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்றதாகும்.

எனினும் நவல்னியை சிகிச்சைக்காக ஜேர்மனி அனுப்புவதற்கு ரஷிய மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இன்னொரு இடத்துக்கு மாற்ற முடியாத அளவுக்கு நவல்னியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் நவல்னியின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் இது முற்றிலும் பொய் என்றும், அவரை ஜேர்மனிக்கு அழைத்து செல்ல ஜனாதிபதி புடினின் அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனிடையே ஜேர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களுடன் கூடிய விமானத்தை ஓம்ஸ்க் நகருக்கு அனுப்பி வைத்தது.

அந்த விமானத்தில் சென்ற ஜேர்மனி மருத்துவ குழு நவல்னியின் உடலை முழு பரிசோதனை செய்து அவரை ஜேர்மனி அழைத்து செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என ரஷிய மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நவல்னியை ஏற்றிக்கொண்டு ஜேர்மனி விமானம் ரஷியாவில் இருந்து புறப்பட்டது.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணிக்கு பெர்லினில் அரசு மற்றும் இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் டெகல் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அதனைத் தொடர்ந்து நவல்னி ஆம்புலன்ஸ் மூலம் சாரிட் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அந்த நாட்டின் தலைசிறந்த மருத்துவ நிபுணர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.