ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட எட்டு முஸ்லிம் வேட்பாளர்களும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில்  வெற்றிபெற்றிருந்தால், முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷ அரசாங்கத்தில் வென்றிருக்க முடியுமெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகான சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். உவைஸ், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலாவது இந்த நம்பிக்கையை வெல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

   கொழும்பு, மருதானையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

   இதுபற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, இம்முறை பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எட்டு முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தது. ஆனால், வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட  காதர் மஸ்தான் மாத்திரமே  பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட எட்டு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தால், ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை வென்றிருக்க முடியும்.

   முஸ்லிம் சமூகத்தைப் பிழையாக வழி நடாத்துவதிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகிக்கொள்ள வேண்டும். ராஜபக்ஷக்களை தொடர்ந்தும் முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டுவதால், பாரிய விளைவுகளுக்கே இத்தலைமைகள் வித்திடுகின்றன. சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சிக்குள் முஸ்லிம் தனித்துவத் தலைமைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை, இம்முறை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. 

   எனவே, இனங்கிச் செல்லும் அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும். இத்தயார்படுத்தல்களையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனம் செய்து வருகிறது. பொதுத் தேர்தலில் ஒன்றுபட்ட முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதி நிதித்துவங்களை மேலும் அதிகரிப்பதற்கு முஸ்லிம்கள் உழைக்க முன்வர வேண்டும். 

   பன்னிரெண்டு இலட்சம் முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தேசியப் பட்டியலில் ஒரு முஸ்லிமுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், சுமார் இரண்டு இலட்சம் முஸ்லிம் வாக்குகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மூன்று முஸ்லிம்களை தேசியப்பட்டியலில் நியமித்து, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை கபினெட் அமைச்சராவும் ஆக்கியுள்ளது. இதிலிருந்து, "இனவாதிகள் யார்...?" என்பதை, இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான்,
 சில்மியா யூசுப் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.