தனியாருக்கு சொந்தமான காணியை சட்ட விரோதமான முறையில் அபகரிப்புச் செய்த மண்முனை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஜனாப் ஏ.சி. றிஸ்வான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் (முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) மற்றும் சட்டத்தரணி எம்.ஐ.எம். இன்ஸாப் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் விளக்கமளிக்கையில்,
மட்டக்களப்பு, செல்வா நகர் கிழக்கு எனும் மண்முனை பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் 40 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்பு நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான காணியிணை மண்முனை பிரதேச சபையினது தவிசாளரான சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் என்பவர் 26.06.2020ம் திகதி இல. 2,182ம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையில் அறிவித்தலின் பிரகாரம் மயானபூமி என பிரகடனம் செய்திருந்தார்.
குறித்த பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட பொது மக்களின் குடியிருப்பு காணி அமைந்திருந்ததுடன் இதனை சிறிதளவேணும் கவனத்திற் கொள்ளாத தவிசாளர், தனக்கு காணிகளை மயானபூமி பிரகடனம் செய்யும் அதிகாரம் இல்லை என்பது கூட தெரியாமல் இவ்வாறான நடவடிக்கையை மேற்கோண்டிருந்தார்.
இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் சார்பில் தெரிபட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் (முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) மற்றும் சட்டத்தரணி எம்.ஐ.எம். இன்ஸாப் அவர்கள் மண்முனை பிரதேச சபையினது தவிசாளருக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதமன்றில் வழக்குத் தாக்கல் செய்து நேற்றைய தினம் 22.09.2020 மிகச் சிறந்த முறையில் வழக்கை ஆதரித்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் அவர்கள் வழக்கினை நன்கு பரிசீலனை செய்த பின் குற்றஞ்சாட்டப்பட்டபட்ட மண்முனை பிரதேச சபையினது தவிசாளரான சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் என்பவருக்கு அழைப்பாணை பிறப்பித்தார்.
பகிரங்க ஊழியராக இருக்கும் பிரதேச சபையினது தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நீதிமன்றதின் கடைமையாக இருப்பதுடன், இவ்வாறான நடவடிக்கைகளினாலேயே பொது மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை வலுக்கின்றது எனலாம் என்று கூறினார்.
காத்தான்குடி நிருபர்.
(சிலோன் நேசன்)
கருத்துரையிடுக