(நா.தனுஜா)

மரண தண்டனைக் கைதி ஒருவரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கும் அரசு, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரை மாத்திரம் விசாரணைகளின்றி நீண்ட காலமாக ஏன் தடுத்து வைத்திருக்கிறது ? என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது கொலைக் குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை வழங்குகின்றது. பின்னர் அந்தக் குற்றவாளி ஒரு கொள்கை வகுப்பாளராகப் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இரு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நடைபெற்று முடிகின்றது.

அவ்வாறிருக்கையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளடங்கலாக மேலும் பலர் விசாரணைகள் எவையுமின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? இது நியாயமானதா?

மரண தண்டனைக் கைதிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட இன்னும் யாரெல்லாம் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறார்கள்? இவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எனினும் நாம் அதற்கு எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.