ICCPR இன் கீழ் கைது செய்யப்பட்டு 150 நாட்களுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக் சார்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் (17) முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரம்ஸி ராசிக் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
இதன் போது உயர்நீதிமன்றத்தினால் ரம்ஸி ராசிக்கிற்கு பிணை வழங்கப்பட்டது.
மேலும் நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் பி.ப. 3 மணியளவில் அவர் விடுவிக்கப்படுவார் என்று சட்டத்தரணி அஜாஸ் மொஹமட் சியன நியூஸ் இடம் தெரிவித்தார்.
சமூக சேவகரும், சமூக ஊடக செயற்பாட்டாளருமான ரம்ஸி ராசிக் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஆவார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் சேவைக்காலம் முடிவடைய முன்னரே ஓய்வில் அனுப்பப்பட்டார். மேலும், இனவாதத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான அனைத்து வகையான இனவாத செயற்பாடுகளை ஒடுப்பதற்கு சிந்தனா ரீதியான ஜிஹாத் (போராட்டம்) இற்கு தயாராக வேண்டும் என்று முகநூல் பதிவொன்று மூலமாக குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜிஹாத் என்ற சொல்லுடன், (Ideological war) என்ற ஆங்கில அர்த்தத்தினையும் சேர்த்திருந்தார். காரணம், தவறாக எவரும் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதனையடுத்து ரம்ஸி ராஸிக் இற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இதனையாடுத்து அவர் இரு நாட்களின் பின்னர்
அதனை தொடர்ந்து ஏப்ரல் 2 (மறுநாள்) "இதற்கு மேலும் நான் முகநூலில் இதுபோல எழுதப் போவதில்லை. நான் எனது எழுத்துப்பணியை நிறுத்திக் கொள்கிறேன். என் உயிர் மற்றும் வாழ்வு குறித்து எனது மகள் மிகுந்த அச்சத்தில் உள்ளார். நான் இனி ஒதுங்கிக் கொள்கிறேன்.." என்று பதிவொன்றை இட்டிருந்தார்.
முகநூல் வழியாக தனக்கு விடுக்கப்பட்டிருந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக ரம்ஸி 2020.04.09ஆம் தேதி மு.ப. 11.04 அளவில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு மின்னஞ்சல் வழியாக முறைப்பாடு ஒன்றைச் செய்தார். அதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அதே தினம் பின்னேரம் கொழும்பிலிருந்து சென்ற புலனாய்வுத் துறையினரால் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் ரம்ஸி ராசிக்கின் வழக்கு பல தவணைகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் இதற்கு முன் பல தடவை இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பல தடவை முகநூல் மூலம் குரல் கொடுத்திருந்ததாக கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்திருந்தார். மேலும் அவற்றின் பிரதிகளை நீதிமன்றில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக