(செ.தேன்மொழி)

அமெரிக்க பிரஜை ஒருவரை பாராளுமன்றத்தில் அமர்த்துவதற்காக அரசிலமைப்பு திருத்தத்தையே மாற்ற முயற்சிப்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தத்தில் 18 இல் உள்ள விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளது. தனிநபர் கையில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலே இந்த புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது என்றும் முஜிபுர் ரஹூமான் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, 19 ஆவது திருத்தத்தை நீக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்கின்றது. இந்த திருத்தமானது மக்கள் பக்கமிருந்து அவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசிலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் யாரும் அதனை மாற்றி அமைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களது ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அவருடைய ஆட்சிக் காலத்தில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியிருந்தார். இதன்போது ஏற்கனவே இருந்த ஜனாதிபதி பதிவிக் காலத்தை மாற்றியமைத்து, நிறைவேற்று அதிகாரத்துக்கு மேலும் பலத்தை பெற்றுக் கொடுத்தார். இதனால் மக்களே அவரை புறக்கணித்தனர்.

அதற்கு பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன், இதற்கு பாராளுமன்றத்தில் ஒருவர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசாங்கம் ஏன் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கே முயற்சித்து வருகின்றது. இந்த திருத்தத்தில் காணப்படும் சிக்கலான விடயங்களை நீக்கி அந்த திருத்தத்தையே தொடர்ந்தும் செயற்படுத்தலாம் அல்லவா?

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்று கூறிக்கொண்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களையே மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்நிலையில் ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றது. ஆனால் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் அந்த பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது. இதனால் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பெயரளவிலானதாகவே இருக்கும்.

கடந்த காலத்தில் அலரி மாளிகைக்கு ஒருவரை அழைத்து அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் அறிந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படப்போகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

அமெரிக்க பிரஜை ஒருவரை பாராளுமன்றத்தில் அமர்த்துவதற்காக அரசியலமைப்பு திருத்தத்தையே மாற்றியமைக்க தீர்மானித்தமை தொடர்பில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக பேசி வரும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நானயக்கார மற்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அவர்களது நிலைப்பாட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் மீண்டும் ஒரு தனி நபரின் கையில் அதிகாரங்களை ஒப்படைப்பதற்கே முயற்சிக்கின்றது. இந்நிலையில் ஒருவர் கையில் அனைத்து பொறுப்புகளையும் பெற்றுக் கொடுத்து சர்வாதிகார ஆட்சியை செயற்படுத்துவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றதா? என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.