(நா.தனுஜா)

வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றை வழங்கும் நோக்கிலேயே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவை கடந்த இரண்டு வருட காலமாக இயங்காத போதிலும், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து எந்தவொரு போராட்டங்களோ எதிர்ப்புக்களோ எழவில்லை என்பதால் புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது இது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கேள்வி : வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் நாடளாவிய ரீதியில் நீண்ட காலமாக மாகாண சபைகள் இயங்காமல் இருப்பதை காணமுடிகிறது. ஆகவே புதிய அரசியலமைப்பின் ஊடாக அவற்றையும் நீக்கிவிடலாம் அல்லவா?

பதில் : ஆம், உண்மையில் வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றை வழங்கும் நோக்கிலேயே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அந்த மாகாண சபைகள் கடந்த இரண்டு வருட காலமாக இயங்காத போதிலும், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்தவொரு போராட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்ப்பு குரல்களும் எழவில்லை. ஆகவே புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது இவ்விடயங்கள் தொடர்பிலும் கருத்திற்கொள்ளப்படும்.

அதேபோன்று புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. நாட்டின் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி, நீண்ட கால நோக்கில் அது தயாரிக்கப்பட வேண்டும். முன்னைய அரசாங்கத்தினாலும் புதிய அரசியலமைப்பு வரைவைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் அது ஒரு சமஷ்டி (பெடரல்) அரசியலமைப்பாகவே காணப்பட்டது. அதுவும் முன்னைய அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே அதுபோலன்றி, விசேட நிபுணர்கள் குழுவினால் நாட்டிற்குக் கேடற்ற விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.