டயகம பகுதியில் இருந்து போடைஸ் ஊடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த பயணிகள் 1990 நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாகவும் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த 35 பேரில் 24 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சதீஸ்குமார்-


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.