இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டமைக்கு, சரியான முறையில் பரிசோதனை மேற்கொள்ளாமையே காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சரியான முறையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டிருந்தால் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருக்க வாய்ப்புகள் இருந்தது என வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் வைத்தியர் ஹரித அழுத்கே கருத்து வெளியிட்டார்.
சமூக மாதிரி தொற்று தொடர்பில், நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் இன்னமும் ஏற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கு ஒன்றை வைத்தே நோயாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இலக்கை அறிந்து வேலை செய்ய வேண்டும். இவ்வாறான கருத்துக்களை வெளிட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக இதனை கட்டுப்படுத்துவதற்காக முறை ஒன்றை தயாரித்து முன் வைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இந்த சந்தர்ப்பத்திலாவது சமூக பரவல் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாத வரையில் எதிர்காலத்தில் பேலியகொட போன்ற பரவல்கள் ஏற்படுவதனை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.