தற்போதைய நாட்டின் நிலைமைக்கு மத்தியில் வைபவங்கள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாபேம பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக்காலப்பகுதியில் கடைகளுக்கு செல்வதை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்குமாறு அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நிலையங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் செல்வது பொருத்தமானதாகும். இதுதொடர்பில் வீட்டில் உள்ள அனைவரும் தற்போதைய நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பொது மக்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர கருத்து தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகையில் குறைவை காணக்கூடியதாக இல்லை என குறிப்பிட்டார். இருப்பினும், புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் ஒன்றிணைவது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணிப்போரில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டோர் தமது நோயை கட்டுப்படுத்தி கொள்வது அத்தியாவசியமாகும் என்றும் அவர் கூறினார். இவ்வாரானோர் சமூகத்திற்குள் செல்வதை தவீர்த்துக்கொள்ள வேண்டும். நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் வீடுகளிலேயே கிடைக்க கூடியதான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விசேட வைத்தியர் சுதர் சமரவீர கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.