(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான நாடு என்ற  கொள்கையின் அடிப்படையில் அனைத்து இன மக்களின் மனித உரிமைகளையும்  பாதுகாத்து அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில்  அரசாங்கம் செயற்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:

1950 டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத்தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423(ஏ) பிரிவிற்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.

அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தவாறு அரசாங்கம் செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் . ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்தியுள்ளோம்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.