இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்கள் அதன் பீட சபையின் உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

கலாநிதி மஸாஹிர் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித வளர்ச்சிக்கு மிகக் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கியதோடு, மிக அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை ஆரம்பிக்க முழு மூச்சாக செயல்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (23.12.2020) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பீடாதிபதியை தெரிவு செய்வதற்கான விஷேட பீட சபைக் கூட்டத்திலேயே இவர் மூன்றாவது தடவையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதோடு அடுத்த மூன்று ஆண்டுகள் பீடத்தின் பீடாதிபதியாக இவர் தொழிற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குறணையைச் சேர்ந்த மர்ஹூம்களான செய்யித் முஹம்மத், ஸபா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரான  இவர் ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரியுமாவார். கலாநிதி மஸாஹிர் தனது விசேட கலைமாணி மற்றும் முதுதத்துவமாணிப் பட்டங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப் பட்டத்தை மலேசியாவிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டவராவார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.