யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத்தூபி அகற்றப்பட்டதனை எதிர்த்து நாளைய தினம் வட, கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மு.கா. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு மற்றும் கொவிட்–19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை பலவந்தமாக எரியூட்டுவது போன்றன நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமதிக்கும் அரசாங்கத்தின் வெளிப்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.

இந்நடவடிக்கைகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை (11) வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்தால் கடையடைப்புக்கு முஸ்லிம் சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டு கொள்கிறது.

இதேவேளை, 

நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்கள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இல்லாமலிருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம் கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.