தேசிய அடையாள அட்டையை ஒரு நாள் சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளும் முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையானது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த காலங்களில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
மேலும், யாரேனுமொருவர் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்காக பத்தரமுல்லை தலைமைக் காரியாலயத்திற்கு அல்லது தென்மாகாண காரியாலயத்திற்கு வர இருப்பார்களாயின் அதற்கான குறித்த திகதி மற்றும் இலக்கமொன்றையும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த பிரதேச செயலாளர் காரியாலயத்தின் தேசிய அடையாள அட்டை பிரிவிற்குச் சென்று அல்லது 0115 226 100 / 0115 226 100 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு இந்த சேவையை பெற்றுக்கொள்வதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், பொதுவான சேவையினூடாக தேசிய அடையாள அட்டையைப் பெறவிருப்பவர்கள் தமது விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தரினூடாக குறித்த பிரதேச செயலாளர் காரியாலயத்தின் அடையாள அட்டைப் பிரிவுக்கு அனுப்பி வைக்க முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பப் படிவம் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் தேசிய அடையாள அட்டையை அச்சிட்டு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.