(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு நுவரெலியாவில் வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். அத்தோடு  அங்கு மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி  இணைப்புக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் 24 மாவட்டங்களில் தேசிய மீலாத் விழாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை தேசிய மீலாத் விழா இடம் பெறவில்லை. இதன் காரணமாக இவ் வருடத்துக்கான (2021) தேசிய மீலாத் விழாவினை  நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ விடுத்த  தீர்மானத்திற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

மேற்படி நிகழ்வின் ஆரம்ப கூட்டம் நுவரெலிய மாவட்ட செயலகத்தில்  மார்ச் மாதம் 04 ஆம் திகதி நுவரெலிய மாவட்ட மேலதிக செயலாளர் சரத் ஜன்தர ஏற்பாட்டில் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற  உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்கவின்  தலைமையிலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் தேசிய மீலாத் விழா (2021) இவ்வருடம் நுவரெலியா மாவட்டத்தில் நடாத்த வேண்டும் என்ற ஜனாதிபதினதும் பிரதமரினதும் வேண்டுக்கோளுக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் கோலாகலமாக தேசிய மீலாத் விழா நடாத்தப்படும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழா சிறப்பாக நடாத்துவதற்கு போதிய இடவசதிகளைக் கொண்ட இடம் ஒன்றுதெரிவு செய்யப்பட வேண்டும். இங்கு தற்பொழுது நுவரெலியா, கொத்மலை கபுகஸ்தலாவ, தலவாக்கலை மற்றும் ஹட்டன் ஆகிய நான்கு நகரங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. இதில் ஒரு நகரம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு மீலாத் விழா நடாத்தப்படும்.

மீலாத் விழாவை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல்,  நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் புகழ் பெற்ற பள்ளி ஒன்றை புனரமைத்தல், வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்தல், நுவரெலியா மாவட்டத்தில் ஒப்பனை இல்லாத அனைத்துப் பள்ளிகளிலும் ஒப்பனைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

மேலும் 2021 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் விழாவையொட்டி முத்திரை ஒன்றும் வெளியிடப்படும். மாவட்ட முஸ்லிம்களின் கலாசார பாரம்பரியம் தொடர்பான சரித்திர புத்தகம் ஒன்றும், 2021 தேசிய மீலாத் விழா சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படும். முஸ்லிம் கலாசாரம் தொடர்பான கண்காட்சி ஒன்றும் நடாத்தப்படும். அதேபோல கலாசார நிகழ்வுகளும் நடாத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு செயற்பாட்டு குழுக்கள், செயற்குழு, உப குழுக்கள் மற்றும் சரித்திரப் புத்தகத்தை எழுதுவதற்காக குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

• மீலாத் விழா நடைபெறுகின்ற நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வருகையை ஒட்டி அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பதாகைகளை தொங்க விடுதல்.

• மீலாத் விழாவுக்காக பிற மதங்களின் கலாசார நிகழ்ச்சிகளையும் கலாசார திணைக்களத்தின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

• தேசிய மீலாத் விழாவுக்காக இணைக் கமிட்டி உருவாக்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட பள்ளிவாயல்களில் ஒரு தர்மகர்த்தா வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு உப குழுக்களை அமைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

• தேசிய மீலாத் விழாவை யொட்டி ஜீவகாருண்யம் திட்டத்தின்கீழ் வேறு கழுதை பராமரிப்பதற்காக பராமரிப்பு நிலையங்களுக்கு உதவுவதற்காக மாவட்ட பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.

• தேசிய மீலாத் தினவிழா  நுவரெலிய மாவட்டத்தில் நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள 38    பள்ளிவாசல்களுக்கும் அபிவிருத்தி செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

• தேசிய மீலாத் தின கூட்டத்தைத் தொடர்ந்து பணிப்பாளரின் தலைமையில் நுவரெலிய மாவட்டப் பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் நுவரெலிய மாவட்டத்திற்கான 11பேர் கொண்ட சம்மேளனம் ஒன்று உருவாக்கப்பட்டது.

• தேசிய மீலாத் விழாவையொட்டி பீட்டர் முதியோர் இல்லம் மற்றும் 2 சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்குதல் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். இந்த நிகழ்ச்சிகளை

மேற்கொள்வதற்கான

நிதியினை நகரத்தில் உள்ள வியாபார நிலையங்களில் இருந்து நன்கொடையாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

• தேசிய மீலாத் விழா விழாவின் பிரதான செயற்பாட்டு கொமிட்டி 10 பேர்களை கொண்டதாகும்.

இதன் பொறுப்பு நுவரெலியா மாவட்ட  செயலாளருக்கு  வழங்கப்பட்டது.

•நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறுகின்ற இவ்விழாவை பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்ற நுவரெலியா, கொத்மலை கபுகஸ்தலாவ, தலவாக்கலை மற்றும் ஹட்டன் ஆகிய நான்கு இடங்களில் உள்ள பழமை வாய்ந்த  பள்ளிவாயல்களின் பெயர்கள்  முன்மொழியப்பட்டன. கலைஞர்கள் ஊடாக புகைப்படங்களைப் பெற்று மாவட்டச் செயலாளர் மற்றும் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கிய கொமிட்டி மூலம் ஒரு பள்ளிவாசல் தெரிவு செய்யப்பட்டு முத்திரை வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

 • நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக நடவடிக்கை எடுக்கும் படியும் அதற்கான மரங்களை விவசாயத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை , வன பரிபாலன திணைக்களம் ஊடக மரங்களைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் பொறுப்பேற்றார்.



• மீலாத் விழாவையொட்டி தேசிய மீலாத் அன்று நுவரெலிய  நகரத்துக்கு நுழையும் நான்கு நுழைவாய்களுக்கும் பந்தல்கள் அமைப்பதற்கான பொறுப்பை நுவரெலியா மாநகர சபைக்கு  பொறுப்பாக்கப்பட்டது.

• மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களும் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 17,18,19,20 ஆகிய தினங்களில் மின் விளக்கு மூலம் அலங்கரிக்கப்படுதல் வேண்டும் என்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மேதிக செயலாளர் ரேணுக்கா அமரசிங்க, நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் மஹிந்த தொடம்பே கமகே, முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் எம்.எம். பளீல்  உட்பட நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ பிரதேசங்களிலுள்ள அனைத்து முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். (RH)

 






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.