சமகால கோவிட் அசாதாரண நிலைமைகள் குறித்து ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

தற்போதைய அரசாங்கம் கோவிட் வைரஸைக் கூட உபயோகித்து எங்கள் நாட்டுக் குடிமக்களின் சுதந்திர உரிமைகளை பறிமுதல் செய்து வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளமை துரதிஷ்டவசமான நிலையாகும்.

இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் நாட்டு மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை மழுங்கடிக்கும் ஓர் பாதையிலயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்,அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை போன்றனவற்றின் மூலம் சட்டத்தின் ஆட்சியையும்,நாட்டின் ஜனநாயகத்தின் இருப்பை மதிக்காத தன்மையின் போக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புலப்படுகிறது. 

சுகாதார அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்குரிய உரிமைக்கு தடைகளை ஏற்ப்படுத்துவதிலிருந்து புலப்படுவது கோவிட் பேரழிவின் பெயரில் இந் நாட்டுப் பிரஜைகளின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் மிலேச்சத்தனமான முயற்சியாகும்.

அரசாங்கம் கையாளும் நடைமுறைகள் அவற்றின் விளைவுகளை அவற்றின் பால் மக்களுக்குள்ள உரிமை என்பன ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய திறந்த கலந்துரையாடல் என்பவற்றிற்கு தடைகளை ஏற்படுத்த விளைவதன் மூலம் அரசாங்கம் தகவல்களை மறைப்பதான தோற்றப்பாடே மேலெழுகிறதல்லவா?

மக்களுக்காக தாம் சரியான முடிவுகளை நடைமுறையில் பிறப்பிப்பதாக இருந்தால் திறந்த கருத்துத் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்ப்படாது.

அரசாங்கம் தற்பெருமை மனோபாவத்திலிருந்து மீண்டு,யதார்த்தபூர்வமாக இத் துறை சார் செயற்பாடுகளில் குறித்த வைத்திய பிரபலங்கள் மற்றும் விஷேட நிபுனர்களின் வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயற்ப்பட முன் வர வேண்டும்.

கோவிட் ஆபத்தின் ஆரம்பத்திலிருந்தே அது குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது முன்னாயத்த நடைமுறைகளைக் கையாளாததன் விளைவுகளையே இன்று நாடு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

கோவிட் வைரஸின் ஆபத்து குறித்து முன்னரே அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்,2020 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதிகளில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தமையை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். முதலாவது எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பம் இலங்கையில் வைரஸ் பரவலோ அல்லது தொற்றாளர்களோ இனம் காணப்படாத சந்தர்ப்பமாகும். இரண்டாவது எச்சரிக்கை விடுக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஒரு தொற்றாளர் இனம்காணப்பட்ட சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பங்களில் இந் நோயின் ஆபத்துகள் குறித்தும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு சுட்டிக்காட்டிய போது ஆளும் தரப்பினர் எதிர்க் கட்சித் தலைவரை கொச்சைப்படுத்தினர்.

2020 ஜனவரி ஆரம்பம் முதல் எதிர்க்கட்சித் தலைவர் இதன் ஆபத்துக்கள் குறித்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தார்,அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி வடிவிலும் அவர் விடயங்களை முன்வைத்திருந்தார்.

முகக் கவச ஆயத்தம், அவசர சிகிச்சைப் படுக்கைகள், மற்றும் வென்டிலேட்டர்களை முன்னாயத்தம் செய்தல், பிசிஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்தல், தடுப்பூசிகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்கள் இதில் அடங்களாக இருந்தன.

நாடு தற்போது ஆபத்தான நிலைமையை முகம் கொடுத்துள்ள இக்கட்டான இக்கால கட்டத்தின் பின்னரேனும், அரசாங்கம் தமது அற்ப அரசியல் இருப்பை தக்க வைக்க எடுக்கும் பிரயத்தனங்களை கைவிட்டு விட்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து பரந்த தூரநோக்கில் ஆபத்தான பேரழிவிலிருந்து நாட்டை மீட்க கூட்டுப்பொறுப்புடன் செயறப்பட வேண்டியதன் அத்தியவசியத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.