திஸ்ஸமஹாராம குளத்தில் வண்டல் மண் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இராணுவமும் புலன்விசாரணைகளை மேற்கொண்டனர். குறிப்பிட்ட நபர்கள் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்படவில்லை என்று கண்டறிய்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இவர்கள் அணிந்திருந்த சீருடை அவர்கள் கடமையாற்றும் நிறுவனத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் சீருடையாகும். சமூக ஊடகங்களில் குறிப்பிட்டது போன்று இந்த சீருடைகள் சட்ட விதி முறைகளுக்கு முரண்பட்டதாக இல்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இராணுவம் உறுதி செய்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த திட்டப்பணிகளில் கடமையாற்றும் சீனப்பிரஜைகள் சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் சீன் இராணுவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் கலந்துகொண்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.