முழு நாடும் பேரழிவில் உள்ளது. ஒன்று சேராமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டை காப்பாற்றுவதற்கான வழியை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிபுணர்களின் கருத்தை நிராகரித்து, தன்னிச்சையாக செயற்படுவதால் ஏற்படும் விளைவுகளை நாடு முழுவதும் அனுபவித்து வருகிறது என்றும் எதிர்வரும் வருடத்தில் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையை உணர்ந்து உயிர்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், இந்த தருணத்தில் ஆட்சியாளர்கள் மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அன்றிலிருந்து தான் பேசியதை கேலி செய்து அவமதித்த அரசாங்கம் இன்று அது மரணத்தின் போர்வையில் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராஜதந்திர மட்டத்தில் வெளிநாட்டு தூதரகங்களின் ஆதரவைப் பெற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறையானது ஒன்றரை ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளது எனவும் மீண்டும் அதனை செயற்படுத்தி அனர்த்த நிலைமையில் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் அனைத்து அழுத்தங்களையும் தாங்கும் சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச சேவையின் பிற துறைகள் விசேடமாக பாராட்டப்படல் வேண்டும் எனவும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு உரிய பாராட்டுகள் சமமாக சேர்க்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தில் உடனடியாக கடன் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் செல்லக்கூடும் எனவும் அத்தகைய நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தான பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் தன்னிடம் இல்லை என்றும், அரசியல் செய்வதற்கு முன்பு நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)
கருத்துரையிடுக