களுத்துறை மாவட்டத்தின் ஊடக தேவையை கருத்திற் கொண்டு களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வு உட்பட ஊடக பயிற்சிப்பட்டறை வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் 9.00 வரை நிகழ்நிலையில் இடம்பெற்றது.இதில் விசேட அதிதிகளாக கெளரவ நீதியமைச்சர் அலிசப்ரி, முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ மர்ஜான் பளீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை இருக்கின்றது.ஊடகத்தினால் ஆட்சியை நிலைநாட்டவும் முடியும், கவிழ்க்கவும் முடியும்.
களுத்துறை மாவட்டத்தில் இவ்வாறானதொரு ஊடக அமைப்பை ஆரம்பித்திருப்பது மிகவும் சிறப்பான பணியாகும்.அத்தோடு நீதியமைச்சர் என்ற வகையில் அனைத்து வித ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைய எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என கெளரவ நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பு' காலத்திற்கு தேவையான சிறந்த இளைஞர் பரம்பரையொன்றை எமது சமூகத்துக்கு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், எமது மாவட்டத்தில் இப்படியானதொரு ஊடக அமைப்பை உருவாக்கியமைக்கு சம்பந்தப்பட்டோருக்கு முதலில் நான் நன்றியையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவிக்கின்றேன்.
இந்த ஊடக அமைப்பு முழு மாவட்டத்திலும் தனது பணியை விரிவுபடுத்தி சிறந்த இளைஞர் அணியொன்றை உருவாக்க முன்வர வேண்டும். அதே போல் இந்த அமைப்பினூடாக எமது இளைஞர்களுக்கு காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க முடியுமாக இருந்தால் அதுவே எமது சமூகத்தின் வெற்றியும் காலத்தின் தேவையுமாகும்.
இளைஞர்கள் சிறந்த முறையில் வழிகாட்டப்பட வேண்டும். அப்போதுதான் சிறந்த ஒழுக்கமுள்ள சமுதாயமொன்றை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு நிச்சயம் சிறந்த பங்களிப்பை எமது சமூகத்துக்கு வழங்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.அத்தோடு மூத்த ஊடகவியலாளர் என்.எம் அமீன் ஆலோசகராக இருப்பது மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.
21ம் நூற்றாண்டின் யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் பலசாலிகள் .ஊடகத்தின் முக்கியத்துவத்தை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தவகையில் களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .இதற்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் ஆரம்ப உரையை சீரிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும்,நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம் அமீன் ஆற்றினார்.ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் அத்தோடு வாசிப்பின் முக்கியத்தை வலியுறுத்தினார்.மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகம்மதின் கூற்றான 21ம் நூற்றாண்டின் பலசாலிகள் ஊடகத்துறையில் இருக்கின்றவர்கள் என்ற கூற்றையும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் அதனை எவ்வாறு கையாள்வது பற்றி knowledge Box இன் Executive director கருத்துரைத்தார்.
ஊடகத்துறையில் பெண்கள் ,பெண்களுகாகு ஊடகத்துறையின் முக்கியத்துவம் பற்றி CGC talk shop ஸ்தாபகர் ரினோஸா நவ்சாத் அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்.
இறுதியாக நன்றியுரையை அமைப்பின் உறுப்பினரும், Newsnow இணையத்தளத்தின் ஊடகவியலாளருமான செல்வி அப்ரா அன்ஸார் ஆற்றினார்.மூன்று வருட கனவு நனவாகியது என்றும் இதற்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர், களுத்துறை நகர சபை உறுப்பினருமான ஹிசாம் சுகைல் அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், வானொலி, பத்திரிகை, இணையதளங்களின் பிரதான ஆசிரியர்கள் ,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்
80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வை சிறப்பாக நடாத்திய களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பின் ஆலோசகர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளரும், களுத்துறை நகர சபை உறுப்பினருமான ஹிசாம் சுகைல் ,ஊடகத்துறை மாணவன் மற்றும் சமூக சேவையாளர் முஹம்மத் நஸ்ரான் ஊடகவியலாளர்களான ஆகில் அஹ்மத் மற்றும் அப்ரா அன்ஸார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் ஒன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளதோடு அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.