கம்பஹா, அத்தனகல்ல, ரன்பொகுணுகமவில் நிர்மாணிக்கப்படும் "கீழ் மட்ட நடுத்தரவர்க்கத்தினருக்கான வீடமைப்புத் திட்டம்" அடிக்கல் நடல்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறையில் ஒரு மாபியாவை உருவாக்குவதன் மூலம் தனது அதிகாரத்தை உருவாக்கும் வணிக வலையமைப்பிற்கு அரசாங்கம் ஒரு போதும் அடி பணியாது என்று கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் மக்களுக்குத் தேவையான அரிசியை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இதற்காக தேவையான ஏற்பாடுகளை எடுக்குமாறு வர்த்தக அமைச்சிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தது போராட்டங்களை அடக்க அல்ல, மக்களுக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக என்றும் அரசாங்கம் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு.சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டிற்குச் சேர வேண்டிய முதலீடுகளை நிறுத்தி மக்களுக்கு அதன் மூலமாகக் கொள்வனவு  செய்வதற்குத் தேவையான டொலர் பற்றாக்குறையைக் காட்டி நாட்டிற்குள் ஒரு பிரச்சினையை உருவாக்குவதற்காக வேண்டி சமகி ஜனபலவேகய மற்றும் எதிர்க்கட்சி அணியினர் முயற்சி செய்கிறார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா, அத்தனகல்ல, ரன்பொகுணுகமவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கீழ் மட்ட நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தின் போது இன்று (30) கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும் வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் தேசிய அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்துகிறது.

இந்த அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 72 புதிய வீடுகள் நிர்மாணிக்கபடும். இதற்குரிய மொத்தச் செலவு ரூ 300 மில்லியன் ஆகும்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்‌ஷ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் துமிந்த சில்வா, அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2021.09.30





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.