ஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மடியிலுள்ள இரட்டைச் சவால்! - சுஐப் எம்.காசிம்



மூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் பலவந்த வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை முடித்திருக்கின்றது. விடுதலைப் போராட்டத்துக்கு வேண்டாதவர்கள் அல்லது வேறு ஒரு காரணத்துக்காகவே இவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தக் காரணங்களானாலும், தமிழர்கள் என்ற அரசியல் அடைமொழிக்குள் இந்த முஸ்லிம்களை உள்வாங்க  விடுதலைப் போராட்டம்  விரும்பியிருக்கவில்லை. ஏன், இந்த விருப்பமின்மை ஏற்பட்டதென்று இன்றுவரைக்கும் தமிழ் மடியின் மண்ணில் விவாதங்கள் இடம்பெறவே செய்கின்றன. 

"முட்டை முதல் வந்ததா? அல்லது கோழி முதல் உயிரெடுத்ததா?" என்ற பாணியில் அமைந்துள்ள இந்த விவாதங்கள்தான், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பொதுமைகளை இன்னும் அடையாள அரசியலிலிருந்து மறைத்தும் வருகின்றன. காட்டிக்கொடுப்புக்காக  வெளியேற்றப்பட்டிருந்தால், காரணங்களில் நியாயம் இருந்திருக்கும். மாறாக, காட்டிக்கொடுக்குமளவுக்கு  முஸ்லிம்கள் கடைக்கண்ணாலா பார்க்கப்பட்டிருந்தனர் அல்லது போராட்டத்தின் பங்குகளிலிருந்து ஒதுக்கப்பட்டனர் என்ற தர்க்கிப்பும் இல்லாமலில்லைதான். 

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில், கிழக்கில் ஏற்பட்ட மோதல்களின் எதிரொலிகள், வடக்கு முஸ்லிம்களை பழிவாங்குவதைத் தவிர்க்க,  வெளியேற்றப்பட்டார்கள் என்ற விவாதம் ஆறுதலானதுதான். ஆனாலும், வடபுல முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, நிபந்தனைகள், நடாத்தப்பட்ட முறைகள் எல்லாம் மாற்றுச் சமூகத்தை  நாடு கடத்தும் மாற்றாந்தாய் மனநிலையில் அமைந்திருந்ததே! முஸ்லிம் தரப்பின் சிந்தனை இதுதான். புலிகள் செய்த தவறுக்காக, மிதவாதத் தமிழ் தலைமைகளையும் வேண்டாத  உறவில் வைக்கக் கூடாதென்பதை உணர்த்த இன்றைய நெருக்குவாரங்கள் போதுமானவை. 

பலவந்த வேளியேற்றம் தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் அந்தஸ்த்தைப் பலவீனப்படுத்தும் என்ற தீட்சண்யத்தை  தமிழ் தலைவர்கள் தெரிந்திருந்தனர். இதனால்தான், துணிவில்லாதிருந்தும் மனச்சாட்சிகளால் சில தலைவர்கள் இதை வெறுத்தனர். இன்று நடந்திருப்பதும் இதுதான். அடைக்கலம் தேடி புத்தளம், குருநாகல், கம்பஹா, அனுராதபுரம் மாவட்டங்களில் குடியேறிய வடபுல முஸ்லிம்கள், தேவையின் நிமித்தம் சிங்களத்தில் தேறியது மட்டுமன்றி, வீட்டு மொழியாக மட்டும் தமிழை மட்டுப்படுத்தியுமுள்ளனர். இது, விரிந்த தமிழ் தேச மண்ணில் கலப்பு மொழிக் கட்டமைப்பை காண்பிக்கத் தவறவுமில்லை. 

சிங்களம் பேசுவது, வெறுப்புடன் பார்க்கப்படும் சூழல் அன்று (1990) வடக்கு, கிழக்கில்  இருந்ததால்தான், இது சுட்டிக் காட்டப்படுகிறதே தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கில்லை. அது மட்டுமல்ல, தமிழ் மொழியை மட்டும் மையப்படுத்திய வடக்கு, கிழக்கு விடுதலைப் போரில், மதங்கள் மற்றும் கலாசாரங்கள் கலப்பது கண்டுகொள்ளப்படாதிருந்த காலமது. பின்னர்தான், வடபுல வெளியேற்றத்தின் அக, புற பின்புலங்களில் மதம் இருந்தமை தெரிய வந்தது. இதனால்தான், வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் இன்று வரைக்கும் சவால்களாகின்றன. 

வட பகுதியில், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவங்கள் எதிர்கொள்ளும் சில நெருக்கடிகளும் இந்தச் சவால்கள் சிலவற்றுடன் சார்ந்திருக்கின்றன. சில தமிழ் தலைமைகள் இதிலுள்ள நியாயங்களை எடுத்துச் சொல்வதிருக்கிறதே! பிரிந்துபோன அரசியல் சந்தியில் மீண்டும் ஒரு மொழிச் சமூகங்கள், இணைவதையே வேண்டி நிற்கிறது. 

தென்னிலங்கையின் எல்லை மீறிய எழுச்சியால், அநாதையாகும் நிலைக்கு வந்துள்ள சிறுபான்மை அரசியல் தைரியமடைவதற்கு இந்த வரலாற்றுச் சந்தியில், நாம் சந்தித்தேயாக வேண்டும். இல்லாவிடில் வடபுல வெளியேற்றத் திலுள்ள தவறுகள், ஒரு மொழிக்குள் இரு சமூகங்களை உருவாக்கி விடும். இந் நிலைப்பாட்டில், தமிழ் மொழி அரசியல் பயணிப்பது, எழுச்சியுற்றுள்ள பெரும்பான்மைவாதத்துக்கு தோதாகி விடும். இந்தத் தோதுகள், சிறுபான்மையினரின் தோல்வியாகி, பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை இன்னும் பலப்படுத்தும். இந்தப் பலப்படல்கள், சிறுபான்மையினர் மீளவும் சந்திக்க வேண்டிய வரலாற்றுச் சந்தியைத் தூரப்படுத்திக்கொண்டே செல்லும். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள், வரலாற்றுச் சந்தியில் இணைய விரும்பும் சகலருக்கும் குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மக்களை வழிநடாத்தும் அரசியல் தலைமைகளுக்கு காலக் கண்ணாடியாக சகலதையும் காட்டிக் கொண்டிருக்கிறது. "தமிழரை முஸ்லிம்களிடமிருந்து பிரித்து, உளவுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேவை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு  இருந்திருக்கிறது. உளவுக்காக மட்டுமல்ல தமிழைப் பேசுகின்ற சமூகங்களின் ஒன்றிணைவு, தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய அடையாளம் என்பது, சிங்களத் தேசம் ஏற்றுக்கொண்டிருந்த கசப்பான உண்மையாகவும் இருந்தது" என்றார். 

எனவே, தமிழ் மொழிக்கான போராட்டம், தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு செல்வதை, ஏதோவொரு சக்தி அல்லது பல சக்திகள் விரும்பவில்லை என்பது மாத்திரம் ஊகிக்கப்படக் கூடிய உண்மை. இந்த உண்மைதான், இலங்கையில் மூன்றாவது தேசிய இனமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் ஷேகு இஸ்ஸதீன்தான், வடபுல முஸ்லிம்களின் பலவந்த  வெளியேற்றம் சிங்களவர், தமிழர் போன்று முஸ்லிம்களையும் ஒரு மூன்றாவது தேசியமாக அடையாளப்படுத்திவிட்டது என்ற அரசியல் கருத்தை முதலாவதாக முன்மொழிந்தவர். 

கைவிடப்பட்ட வாழிடங்கள், கால்நடைகள், இழக்கப்பட்ட உடமைகள், காணாமலாக்கப்பட்ட இம்மக்களின் உறவுகள், இதுவரைக்கும் அரசியல் காரணங்களுக்காக இம்மக்கள் இழந்த உறவுகள் எல்லாம் சகோதர தமிழ் தேசியம் எதிர்கொள்ளும் சாயலிலே உள்ளன. இழப்புக்கள் ஒன்றென்பதால் நிச்சயமாக வலிகளும் அதே ஒன்றாகவே இருக்கிறது. எனவேதான், ஒன்றித்தலில் இணையும் தேசியமாக நமது வலிகள், இழப்புக்கள் இருக்கட்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.