72ஆவது இராணுவ தின நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை (அநுராதபுரம் - சாலியபுரகஜபாபடையணி   10.10.2021)

இராணுவ தினத்தை முன்னிட்டு இங்கு இடம்பெற்ற அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றமை தொடர்பில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

நான் என்னுடைய வாழ்க்கையை, ஓர் இளைஞனாக இராணுவத்திலேயே ஆரம்பித்தேன். சுமார் 20 வருடங்கள் வரையில் நான் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளேன்.

அதன் பின்னர், பாதுகாப்புச் செயலாளராக 10 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். என்னுடைய இராணுவப் பயணத்தை, சமிக்ஞைப் படையணியிலேயே ஆரம்பித்தேன்.

அதன் பின்னர் நான் சிங்க ரெஜிமென்ட்டில் சேவையாற்றினேன். அதற்குப் பின் இவ்விடத்தில், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் டெனிஸ் பெரேராவினால், ரஜரட்ட ரைஃபள்ஸ் என்ற பெயரில் புதிய ரெஜிமென்ட் ஒன்று உருவாக்கப்பட்டது.

ஓர் ஆரம்ப அதிகாரியாக நான் இங்கு வந்தேன். இந்த இடத்தை நான் தான் தெரிவு செய்திருந்தேன்.

ரஜரட்ட ரைஃபள்ஸுக்காக அக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் இன்று மாறியிருக்கின்றன.

அதன் பின்னர் அது கஜபா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது. இந்த கஜபா ரெஜிமென்ட்டில் தான், ஒரு இளம் இராணுவ அதிகாரியாக அதிக காலம் சேவையாற்றியிருந்தேன். இவ்விடத்துக்கு வருகை தந்தது, நான் எனது தாய் வீட்டுக்கு வந்ததுக்குச் சமன்.

விசேடமாக, கஜபா படையணியில் தான் அதிலும் முக்கியமாக, அதற்குத் தலைமை தாங்கிய ஜெனரல் விஜய விமலரத்னவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், என்னுடன் பணியாற்றிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் போன்ற அனைவரும், இராணுவம் என்றால் என்ன, தலைமைத்துவம் என்றால் என்ன, அச்சமின்றி யுத்தம் செய்வது எப்படி, இராணுவத்துக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது, நாட்டுக்காக இராணுவம் எவ்வாறு வழிகாட்டுவது? போன்ற விடயங்களை, ஜெனரல் விமலரத்னவிடம் இவ்விடத்திலேயே நாங்கள் கற்றுக்கொண்டோம்.

கஜபா படையணியின் இன்றைய நிலை குறித்து நான் பெருமையடைகிறேன்.

இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக, அரசியல்வாதி அல்லாத ஒருவர், நாட்டின் முப்படைத் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றமை குறித்து நான் பெருமையடைகிறேன்.

நான் ஓர் இராணுவ அதிகாரி என்ற வகையில், நாட்டுக்காக எனது கடைமையைச் செய்தேன். அதனால் தான் இவை சாத்தியமாகின.

பாதுகாப்புச் செயலாளராக எனது கடமையை நிறைவேற்றினேன். அதனால் தான், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை இந்த நாட்டின் ஜனாதிபதியாகத்; தெரிவு செய்திருக்கிறார்கள்.

இராணுவத்தினர் என்ற வகையில், உங்கள் அனைவருக்கும் இது பெருமைக்குரிய விடயமாகுமென்று நான் நினைக்கிறேன்.

விசேடமாக இன்று, முப்படையினருக்கும் நன்றி செலுத்த வேண்டும். இந்நாட்டில் கடந்த 2 வருட காலத்தில் நீங்கள் செய்த சேவைக்காகவும், நாம் முகங்கொடுத்த கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதுக்குச் செய்த தியாகங்கள், செய்த சேவைகள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனையோருடன் இணைந்து, முக்கியமாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளிலும் அதேபோன்று தடுப்பூசி வழங்குவதிலும் நீங்கள் ஆற்றிய சேவை மிகச் சிறப்பானது.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றலில், உலக நாடுகளுக்கு மத்தியில் நாம் முன்னிலை வகிக்கும் நாடாக மாறியுள்ளோம். அது நீங்கள் ஆற்றிய சேவையினால் தான் சாத்தியமானது. அதற்காக, உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அதேபோன்று, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிப்பதாக, நான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூறினேன்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை, நான் ஒரு கொள்கை ரீதியில் முன்னெடுத்துள்ளேன்.

அதற்கு அவசியமான, தகுதிவாய்ந்த அதிகாரிகளை, உரிய பதவிகளுக்கு நியமித்துள்ளேன். பாதுகாப்புச் செயலாளராகவும் சரி படைத் தளபதிகளாகவும் சரி, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாகவும் சரி, உரிய இடங்களுக்கு உரியவர்களை நியமித்துள்ளேன்.

அதேபோன்று, முப்படையில் காணப்படும் புலனாய்வுப் பிரிவினரின் மனநிலையை நான் மேம்படுத்தியுள்ளேன். இராணுவ அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் தேவையின்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளைத் தகர்த்திருக்கிறேன். அவர்கள் அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்கியுள்ளேன்.

இந்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது பிரதான பொறுப்பாக இருக்கின்றது.

நாம் பிரிவினைவாத தீவிரவாதத்தைத் தோற்கடித்தோம். தற்போது அதை நாம் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வ வழங்க வேண்டும். அந்தப் பிரதேசங்களை நாம் முன்னேற்ற வேண்டும். அவ்விடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும்.

அடிப்படை மதவாதத் தீவிரவாதம், இன்று முழு உலகிலும் காணப்படுகின்றது. நாம் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். அவ்வாறான நிலைமையொன்று, எம் நாட்டில் மீண்டும் உருவாகக் கூடாது.

இது எந்தவொரு மதத்தையும் தாக்கும் விடயமல்ல. நாம் எல்லோரும் அறிந்த முழு உலகமும் அறிந்த இந்நிலைமைக்கு, நாம் முகங்கொடுக்க வேண்டும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நான் மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். நான் அதனை நிறைவேற்றத் தியாக மனப்பான்மையுடன் செயற்படுகிறேன்.

பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே என்னை இந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். நான் கடமையேற்ற காலம் முதலான கடந்த இரண்டு வருடங்களில், முழு உலகமும் வரலாற்றில் எப்போதும் முகங்கொடுக்காத நிலைமைக்கு, கொவிட் தொற்று காரணமாக முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, நாம் கடந்த இரண்டு வருடங்களாகப் போராடியுள்ளோம். நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நிலையில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது. நான் அதற்காக நியாயம் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை.

மக்களுக்காக இந்நிலைமையிலும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

என் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்கமைய செயற்படவில்லை என்று அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் மட்டுமன்றி அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும், கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தி, புதிய இயல்பு நிலைமையின் கீழ் இந்நாட்டைத் திறந்து, புதிய உத்வேகத்துடன் இந்நாட்டை முன்னேற்றுவேன் என்று, மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நாம் அனைவரும் இணைந்து ஒன்றாகச் செயற்பட வேண்டும்.

அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அருத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.

நேற்று மாலை நான் ருவன்வெலிசாயவை வழிபடச் சென்றிருந்தேன். அங்கு படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது, இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், 'ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. நாம் அதனை எதிர்பார்த்திருக்கிறோம்' என்றார். நான் இவ்வருட இறுதிக்குள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

பசுமை விவசாயம் ஒன்றை இந்நாட்டில் உருவாக்குவோம் என்று நாம் வாக்குறுதியளித்தோம்.

உங்களில் பலர் கிராமிய சூழலிலிருந்து வருகை தந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். பெற்றோர், உறவினர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதையும் நான் அறிவேன்.

சேதனப் பசளைப் பயன்பாடு மற்றும் பசுமை விவசாயத்தை உருவாக்குவதென்பது, நான் அளித்த வாக்குறுதியாகும். அது தான் சரியானதும்கூட.

மக்களுக்காக, எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் அதனை முன்னெடுக்க வேண்டும். அதைச் செய்தேயாக வேண்டும். அது மிகவும் கடினமான விடயமாகும்.

விவசாய மக்களுக்காக நான் எப்பொழுதும் தியாகத்துடன் செயற்படுவேன். ஏனென்றால், பொதுமக்களில் 75 சதவீதமானவர்கள் கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். அவர்களில் அதிகமானோரது ஜீவனோபாயம் விவசாயம் ஆகும்.

பாருங்கள் யாருக்கு சிறுநீரக நோய் உள்ளது, யாருக்கு அதிகமாகப் பல்வேறு நோய்கள் காணப்படுகின்றது? விசேடமாக விவசாய மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலேயே இந்நோய்கள் காணப்படுகின்றன.

நாம் இரசாயன உரப் பாவனையிலிருந்து விலகி, எமது எதிர்காலச் சந்ததியினருக்காகப் பசுமை விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

நான் தான் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்கினோம். நான்; தான் நெல்லுக்கான உத்தரவாத விலையினை 50 ரூபாய் வரை அதிகரித்தேன்.

இந்நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகப்படியான மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை முறைமையொன்றை உருவாக்கிக் கொடுப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

என் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் இணைந்து இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

அதேபோன்று, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி இந்நாட்டைக் கொண்டுசெல்வேன் என்று நான் உறுதியளித்திருந்தேன்.

எங்களிடம் எண்ணெய் வளம் இல்லை. எரிவாயு வளம் இல்லை. நிலக்கரி வளமும் எம்மிடம் இல்லை. நீர், சூரியசக்தி, காற்று ஆகியவைதான் எம்மிடம் உள்ளன. இவற்றைக் கொண்டு நாம் எமது சக்தி வலுக்களை அதிகரித்துக்கொண்டு முன்னேற வேண்டும். அதற்கான வாக்குறுதிகளை நான் மக்களுக்கு வழங்கியிருக்கிறேன்.

புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்குமாறு எவராவது கூறினால், அது ஒரு நகைச்சுவையாகும். அதற்கு நான் தயார் இல்லை. இந்த உலகம் அதனையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. நாம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இன்று மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விசேடமாக, தற்போது வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

அதிகளவான மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர். அதனூடாக அதிகளவு அந்நியச் செலாவணி எமக்குக் கிடைகின்றது. அதற்காக நாம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது வெளிநாட்டவர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளனர். நாம் எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, எதிர்வரும் வருடங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமென்று, மக்கள் என்னிடம் எதிர்பார்த்திருக்கின்றனர். அதனை எதிர்பார்த்துத் தான், அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தேன்.

அது பாரிய சவாலாகும். ஆனாலும் நாம் அதனைச் செய்ய வேண்டும்.

எந்தத் தரப்பினராக இருந்தாலும், அமைச்சரவோ பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, அதிகாரிகளாகவோ இருந்தாலும் நாட்டுக்காக நாம் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். நான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறேன். நான் எந்த வகையிலும் ஊழலில் ஈடுபடவில்லை. ஈடுபடவும் மாட்டேன்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் இயலுமான வரையில் செலவினங்களைக் குறைத்துள்ளேன். நான் ஒரு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளேன். அந்த முன்னுதாரணத்தை நீங்களும் வழங்குங்கள் என்று அமைச்சர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.

இந்த ஊழலைத் தடுப்பதற்;கு ஒத்துழைக்குமாறு மக்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்காகச் செயற்றிறன்மிக்க பணியை வழங்குமாறு, அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எதிர்வரும் வருடங்களில் இந்நாட்டை சுபீட்சத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்;கு, அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

இன்று சிறப்பான அணிவகுப்பொன்று நடைபெற்றது. அதற்கு நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இராணுவத்தினர் என்ற வகையில், பயிற்சி நடவடிக்கைகளைப் போன்று சேவைகளையும் வழங்க வேண்டும். இன்று முழு உலகிலும் காணப்படும் இராணுவத்தினர், யுத்த நடவடிக்கைகளில் மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

நீங்களும் அதற்காகப் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றீர்கள். அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பீர்களென்று நான் எதிர்பார்க்கின்றேன்.

விசேடமாக நீங்கள் விவசாயத்துக்காக என்று புதிய படைப் பிரிவு ஒன்றை உருவாக்கி இருக்கின்றீர்கள்.

அச்செயற்பாடுகளுக்காக நன்றி தெரிவிப்பதோடு, உங்களுக்கு சிறந்தோர் எதிர்காலம் உருவாக வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

நன்றி.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

10.10.2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.