விகிதாசார தேர்தல் முறையில் உறுதியாக நிற்கவும், அதை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதற்கும் 7 சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

நேற்று முன்தினம் கொழும்பில் கூடிய சிறுபான்மைக் கட்சிகளின் கலந்துரையாடலைத் தொடர்ந்தே  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்ட அனைத்து அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கருத்திற்கொண்டு விகிதாசார தேர்தல் முறையை பேணுவதற்கு கூட்டாக செயற்படுவதற்கு ஏழு கட்சிகளும் உறுதிபூண்டுள்ளதாக கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

ஜனநாயகத்தின் நலன் கருதி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு இணையாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களும் "சரிபார்ப்பு மற்றும் சமநிலை எந்திரங்களாக" செயற்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி கலந்து கொள்ளாமை தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அவர் தெரிவித்திருந்ததாவது,

ஜே.வி.பியின் தலைவர் நண்பர் அனுர திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தபோதும், அக்கட்சி சார்பாக எவரும் கலந்துக்கொள்ளவில்லை. இதையிட்டு நான் கவலையடைகிறேன் என்று தெரிவித்தார்.

சிறுகட்சி என்றால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல. ஜே.வி.பி  போன்ற அரசியல் சிறுகட்சிகளினதும் இருப்புகளை இந்த அரசாங்கம் இன்று கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது என்றார். 

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல், தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டும் வரையறையானதல்ல. இதுபற்றி நான் எனது உரையில் மிக தெளிவாக கூறினேன்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின் மூலம்  மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்றத்தையும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வரையறை செய்ய இந்த அரசாங்கம் முயல்கிறது. 

தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளை போலவே, ஜேவிபி போன்ற மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளின் இருப்பையும் இது  இல்லாதொழிக்க முயல்கிறது.

பல கட்சி பிரதிநிதித்துவங்களுக்கு  பாராளுமன்றமும், மாகாணசபைகளும் இன்றைய விகிதாசார முறையில் கீழேயே சாத்தியம். எனவே இத்தகைய பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலமேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணிக்க முடியும். இது இந்நாட்டு ஜனநாயகத்துக்கு அடிப்படை அவசியமாகும்.

எனவே இந்த ஜனநாயகத்தை பாதுகாக்கும்  பல கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் விகிதாசார தேர்தல் முறைமையை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஜே.வி.பி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நான் விரும்பியிருந்தேன் என்றார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.