வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால், குறித்த சாரதி, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வீதியிலும், பொலிஸ் நிலையத்திலும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்களை பிரபல சட்ட நிறுவனமொன்று ஜனாதிபதிக்கு  அனுப்பிய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

சாரதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான நீலகண்டன் மற்றும் நீலகண்டன் ஆகியோர், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் கோருவதாக ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதியை வீதியில் தாக்கியமை, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் வெளியாகியதையடுத்து, இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், கிரியெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது கட்சிக்காரர், ஒரு அறைக்குள், நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அப்போது இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை சிரேஷ்ட டிஐஜி தாக்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிர்வாணமாக புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர், தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.