தற்போது நிலவுவது எரிபொருள் தட்டுப்பாடு அல்ல என்று தெரிவித்த இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம், எரிபொருளுக்கு கொடுக்க டொலர்கள் இல்லாததே பிரச்சினை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.

நேற்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பேச்சாளர்  நந்திக பத்திரகே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

37,000 மெற்றிக் தொன் டீசலுக்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வெளியிட்டது என்றும் ஆனால் 8,000 மெற்றிக் தொன் நுகர்வோர் பயன்பாட்டுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குக் கொடுக்கப்பட்டால், மின்சார சபைக்கு எஞ்சியுள்ள 31,000 தொன் டீசல்ன்னும் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று குறிப்பிட்டார்.

எரிபொருளுக்காக மில்லியன் டொலர்கள் வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளியாகும் போது மக்கள் அப்பாவியாக அதனை நம்புகிறார்கள் என்றும் ஆனால் ஒரு முழு நாட்டுக்கும் மின்சாரம் வழங்கும்போது அந்த மில்லியன் டொலர்கள் உண்மையில் ஒரு சிறிய தொகையாகும் என்று சுட்டிக்காட்டினார். 

கடந்த கால பொறியாளர்களும் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் எனவும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி குறித்த திட்டங்கள் கிடைத்தபோது, ​​அவர்கள்  முட்டாள்தனமான அணுகுமுறையை நாடியதாகவும் இன்று முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தினார். 

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பணமில்லை என்றாலோ, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு எரிபொருள் இல்லாவிட்டாலோ மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கான திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.