2022.05.13



அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,

ஜனாதிபதி அலுவலகம், 

கொழும்பு. 


கௌரவ ஜனாதிபதி அவர்களே,


12 மே 2022 ஆம் திகதி அனுப்பிய உங்களது கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக இதை எழுதுகிறேன்.

நீங்கள் என்னைப் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைத்த போது, ​​நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க விரும்பவில்லை என்று கூறவில்லை.உங்களது  அழைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விட்டு தீர்மானத்தை அறிவிப்பதாக மாத்திரமே நான் உங்களிடம் தெரிவித்தேன் என்பதை முதலில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி அங்கத்தவர்கள் இணக்கம் தெரிவித்ததுடன்,குறித்த நிபந்தனைகளின் பிரகாரம் பிரதமர் பதவியை பொறுப்பேற்க நான் தயாராக இருந்ததாலும்,எமது நிலைப்பாடு தொடர்பில் உங்களை சந்தித்த என்னுடைய பிரதிநிதிகள் குழுவினர் உரிய முறையில் உங்களுக்கு விளக்கமளித்து உள்ளனர். 

அதன்பிறகு, உங்களுடனான பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்டப்படாததால், உங்களுக்கும் எனது குழுவினருக்கும் இடையில் தொடர்ந்து பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டது.இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்தும் தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்றதோடு,மேலும் சில ஆலோசனைகள் என் சார்பாக உங்களது முகவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம்,12 மே 2022 திகதியன்றே பிரதமராகப் பதவியேற்க நான் முதன் முதலில் உங்களுக்கு  விருப்பம் தெரிவித்ததாக நீங்கள் கூறியது முற்றிலும் தவறானது.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்,19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையை மீளமைத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நான் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக உள்ளேன் என்பதை நான் உறுதியாக வலியுறுத்தி இருந்தேன். நான் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் நீங்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதும் எனது நிபந்தனைகளில் அடங்கும்.நீங்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்கு பிரதானமாக ஏதுவாக அமைந்த காரணம் நாடு முழுவதும் உள்ள பொது மக்களிடம் மேலேலுந்துள்ள அபிப்பிராயத்தின் பிரகாரமாகும்.நீங்கள் பதவி விலக வேண்டும் என்ற விடயம் என்னுடைய நிபந்தனைகளுக்குள் உள்ளடக்குவதற்கு இதுவே வலுவான காரணமாக அமைந்தது.  மக்களின் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் கால வரையின்றி பதவியில் இருக்கும் வகையிலான பிற நடவடிக்கைகள் மக்களின் இறையாண்மைக்கு விடுக்கும் தாக்குதலாக அமையும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினதும் எனதும் கருத்தாக இருந்தது. 

12 மே 2022 திகதியன்று அனுப்பிய கடிதத்தில், முன்பு குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நீங்கள் பதவி விலக வேண்டியது ஏற்றுக் கொள்ளத்தக்க நியாயமான காலத்திற்குள்ளயே என்றும் எம்மால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மக்களது நிலைப்பாட்டுக்கு விரோதமாக நீங்கள் நியமிக்க உத்தேசித்துள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு பிரதிநிதியையும் பரிந்துரைக்காது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதன்படி,மே 12, 2022 ஆம் திகதி அனுப்பிய எனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நான் அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமராக மக்களுக்கு சேவை செய்ய நான் முழுமையாக அர்ப்பனிப்புடன் தயாராக உள்ளேன்.

நன்றி.

இப்படிக்கு,


சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சி தலைவரும்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.