மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்

- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறுகிறார்



( ஐ. ஏ. காதிர் கான் )

   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால் இந்த அரசாங்கத்துக்கு நீண்ட காலம் செல்ல முடியாது. மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

   கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

   அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத்  தெரிவிக்கையில்,

   பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறமையானவர். சர்வதேச தலைவர்களுடன் சிறந்த தொடர்புகளை வைத்திருப்பவர். அந்தவகையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப்  பிரச்சினைக்குத் தீர்வு காண அவரால் பாரியதொரு பங்களிப்பைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கின்றது.

   ஆனால்,  தற்போதுள்ள பிரச்சினைக்குத்  தீர்வுகாண சர்வ கட்சி அரசாங்கம் அமைத்து, அதற்கே ரணில் விக்ரமசிக்க பிரதமராக இருக்க வேண்டும். அவ்வாறானதொரு அரசாங்கம் அமைத்தாலே, சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களைச்  செய்துகொள்ள முடியும்.

   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த தொடர்பு இருந்தாலும், அவர் ஒரு தனி மனிதர். நாடு என்ற வகையில் சர்வதேசத்துடன் கலந்துரையாடும்போது, ஆளும் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இருக்க வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிகவின் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்துக் கொண்டு, அந்தக்  கட்சிகளைப்  பகைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியாது.

   ஏனெனில்,  மக்களின் கோரிக்கை, "ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் வீட்டுக்குச்  செல்ல வேண்டும்"  என்பதாகும்.

   அவ்வாறு இருக்கும்போது,  கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. அதேபோன்று, ராஜபக்ஷ் குடும்பத்துடன் தொடர்புபட்ட எவருக்கும் மக்கள் இனிமேல்  ஆதரவளிக்கப்போவதுமில்லை. அதனால்,  ஜனாதிபதி நாடு தொடர்பாக சிந்திப்பாராக இருந்தால், அவர் பதவி விலகுவதே நாட்டுக்குச் செய்யும் பாரிய சிறந்த கைங்கரியமாகும்.

   மேலும், அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி தனது பூரண ஆதரவை வழங்கும். 20 ஆம் திருத்தம் கொண்டு வந்தபோது, அன்றைய அரசியல் நிலையை உணர்ந்து, எமது கட்சி அதற்கு ஆதரவளித்திருந்தது. என்றாலும், அது பாரிய தவறாகும். இருந்தபோதும் 19 ஆம் திருத்தத்தைக்  கொண்டு வந்தவர் என்ற வகையில்,  கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 20 க்கு ஆதரவளிக்கவில்லை. 

   நாடு பாரிய பொருளாதார, அரசியல் ரீதியில் வீழ்ச்சியடைய ஜனாதிபதியின் ஏகாதிபத்திய அதிகாரமே காரணமாகும். 20 ஆம் திருத்தம் மூலமே ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் கிடைத்தது.

   அத்துடன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் கட்சி உறுப்பினர்கள் அன்று  பாராளுமன்றத்தில் 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்திருக்காவிட்டால், 20 ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருக்கும். கட்சித் தலைவர்களின் அனுமதியுடனேயே 20 க்கு ஆதரவளித்ததாக, அதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகத்  தெரிவித்திருந்தனர். கட்சியின் தீர்மானத்தைமூன்றிலன்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு முன்பே, மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக ராஜபக்ஷ் அரசாங்கம் இன்று வரலாறு படைத்திருக்கின்றது. உலகில் எந்தவொரு அரசாங்கமும் இந்தளவு குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படவில்லை. அதேபோன்று,  கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியைப்  போன்று உலகில் எந்த ஜனாதிபதியும் மக்களால் மிக விரைவில் வெறுக்கப்படவுமில்லை என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.