மாலைத்தீவிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று மாலை 5 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையத்தை அடைந்தார்.

அவர் சிங்கப்பூர் நோக்கி பயணித்த சவூதி எயார்லைன்ஸின் SAV 788 என்ற போயிங் 787 ரக விமானம் உலகிலேயே அதிகளவானோரால் வழித்தடம் அறியப்பட்ட விமானமாக இன்று சாதனை பதிவு செய்துள்ளது.

இதற்கு காரணம் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற போதிலும், இது இலங்கையர்கள் பெருமைப்படக்கூடிய விடயமாக அமையவில்லை.

பாரிய பொருளாதார, அரசியல் சீரழிவுக்கு காரணமானவர் எனக் குற்றம் சுமத்தப்படும் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய, குறித்த விமானத்திலேயே மாலைதீவிலிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு பயணித்தார்.

இதன்காரணமே குறித்த விமானத்தில் பயண வழித்தடத்தை உலகளாவிய ரீதியில் பலரும் அறிந்துகொள்ள ஆசைப்பட்டதில் வியப்பில்லை.

விமானப் பயணங்களின் வழித்தடத்தை காட்டும் flightradar24.com இன் தரவுகளின்படி, மாலேயிலிருந்துஇன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 க்கு புறப்பட்ட சவூதியாஎயார்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கும் வரை, அதன் வழித்தடத்தை சுமார் 12,000 பயனர்கள் கண்காணித்துள்ளனர்.

ஐரோப்பாவில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படை விமானத்தை அவதானித்தவர்களின் எண்ணிக்கையை விட இது பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அவர் எங்கே பயணிக்கிறார் என்பதை காட்டிலும் அவரிடமிருந்து வரவேண்டிய எழுத்துமூலம் கடிதம் ஒன்றே இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அடுத்தக்கட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதை இலங்கையர்கள் அனைவருமே அறிந்திருக்கிறார்கள்.

அந்தவகையில் அவர் இன்று மாலை சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ள நிலையில் அவர் அதன்பின்னர் பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்று பின்னர் மத்திய கிழக்கு நாடொன்றுக்கும் செல்வார் என்று மாலைதீவு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.