கோட்டாபய ராஜபக்சவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனை வழங்கியவர்களின் பிழையான தீர்மானங்களே கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேற காரணம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று(16) நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச நாட்டை கட்டியெழுப்ப பல விடயங்களை மேற்கொண்ட நிலையில்,சில பிழையான ஆலோசனைகளால் தோல்விக்கண்டுள்ளார். இருப்பினும், அவர் திருடவில்லை,கொள்ளை அடிக்கவில்லை,மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகளால் மன விரக்தியடைந்திருக்கின்றேன். இந்த நாடாளுமன்றத்துக்கு பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை. நாட்டின் அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும்போது மனம் விரக்தியடைந்திருக்கின்றேன்.

மக்களுக்கு நாட்டுக்கு ஏதாவது சேவை செய்யவேண்டும் என்ற நோக்குடனே அரசியலுக்கு வந்தேன். நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத நிலை இருக்குமானால் தொடர்ந்து இந்த அரசியலில் இருப்பதில் பயன் இல்லை.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் நானும் தீவிரமாக ஈடுபட்டேன். அரசாங்கம் என்ற வகையில் எம்மிடமும் சில தவறுகள் இருந்தன. தீர்மானங்களை எடுக்கும்போது நாங்கள் அதனை விரைவாக மேற்கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடியை சமாளித்துக்கொள்ள முடிந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.