அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்றனர்.

அதேவேளை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறும் பொது மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை மதிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

சட்ட கட்டமைப்பிற்குள் மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்க வேண்டியது அவசியமாகும். சமாதானத்தை சீர்குலைக்கும் அதேபோல் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயற்பாட்டிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது.

மக்களின் கருத்து வெளியிடும் உரிமைக்கு பொலிசார் எப்போதும் மதிப்பு அளிப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். அமைதி வழியிலான கூட்டங்களுக்கு ஆதரவளிக்க பொலிசார் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ,எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நேற்று நிராகரித்துள்ளார்.

இன்றும் (08) நாளையும் (09) கோட்டையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் எதிர்ப்பில் ஈடுபடுவோர் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் அதனை நிராகரித்தார்.

குற்றச்செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளதால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பாக நீதவான் கேமிந்த பெரேரா நேற்று அறிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.