மகாசங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது பலமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் இரண்டாவது கலந்துரையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் நாளை (03) பல கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், எதிர்வரும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-02

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.