தேர்தலுக்காக அவசரப்படும் அல்லது தேர்தலை நடாத்துமாறு கோரும் சிறுபான்மை தலைமைகள், தமிழ்பேசும் மக்களுக்காகவே அறிமுகமான மாகாணசபை தேர்தல்களை பிற்போடுவதற்கு 2017 செப்டம்பரில் வழிவகுத்த பாவத்தையும் சுமக்க வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தேர்தலை நடாத்தி என்ன பலன். பொருளாதார வியூகங்களும், திட்டங்களுமே இன்று தேவைப்படுகிறது. சொந்த உழைப்பில் நாட்டை முன்னேற்றும் பொருளாதார செயற்பாடுகளே இன்று அவசியப்படுகிறது.

இதற்காகவே சகலரது ஒத்துழைப்பையும் ஜனாதிபதி கோருகிறார். அவசரமாக தேர்தலுக்குச் செல்ல வேண்டுமென்பது, மக்கள் ஐந்து வருடங்களுக்கு வழங்கிய ஆணையை குழப்பும் செயலாகவே இருக்கிறது. இவ்வாறு தேர்தலைக் கோரும் இதே, சிறுபான்மை தலைமைகள்தான் 2017 இல், மாகாண சபைகளை நடாத்தாமல் காலங்களை இழுத்தடித்தன. 

சிறுபான்மைச் சமூகங்களுக்கு என, விஷேடமாக வழங்கப்பட்ட அரசியல் அந்தஸ்துத்தான் மாகாண சபைமுறைகள். இதைக்கூட நடாத்த முடியாதளவுக்கு இதில் மாற்றங்களைச் செய்வதற்கு உடன்பட்டவர்கள்தான் இவர்கள். எல்லை நிர்ணய அறிக்கையில் இன்னும் இழுபறி நிலவுமளவுக்கே, இவர்கள் இந்தச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்துள்ளனர். இவ்வாறு செய்தவர்கள் இன்று தேர்தலுக்கு அவசரப்படுவதேன்? என அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார்;.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.