முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

எனினும் பொதுஜன பெரமுனவுடன் ராஜபக்ஷாக்களின் அரசியல் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் 06 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற சிறிய கட்சிகளின் தலைவர் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு மாற்று வழி இல்லை என்று கூறினர்.

ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்று கூறுகின்றனர். இவ்வாறு கொள்கையற்றவர்களாக இருக்கும் அவர்களது புதிய அரசியல் கூட்டணி தொடர்ந்தும் பயணிக்காது.

கொள்கைகள் இன்றி நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று அவர்களிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். ராஜபக்ஷாக்களின் அரசியல் பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.

அவர்கள் ஆர்ப்பாட்டங்களின் போது பதவி விலகியமை தவறு என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தும் , கட்சியில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடும் ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 69 இலட்சம் மக்களே தெரிவு செய்தனர். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டமையினாலேயே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கினர்.

எனவே அவர்களை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரமும் அம்மக்களுக்கே காணப்படுகிறது. மாறாக வீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது.

எனவே நாம் தொடர்ந்தும் மக்களுடன் பயணிப்போம். ராஜபக்ஷாக்களும் பொதுஜன பெரமுனவும் தமக்கு வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் அவர் தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.