திரு அடைக்கலநாதன் அவர்களுடன் அண்மையில் சகோ ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினை தொடர்பாக நெறியாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு “ எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேசித்தீர்க்க வேண்டும்” என்ற பதிலை வழங்கி இருந்தார்.
 
இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி, இத்தனை ஆண்டுகளாக ஏன் பேசித்தீர்க்கவில்லை? என்பதாகும். இந்தக் கேள்வியை அடைக்கலநாதன் அவர்களே அங்கு எழுப்பினார். இன்னும் எத்தனை காலம் ‘பேசித்தீர்க்கவேண்டும்’ என்று கூறுவார்கள்; என்பதும் புரியவில்லை.
இங்கு எழுகின்ற இரண்டாவதும் மிகமுக்கியமானதும் இதுவரை கல்முனைப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணுமுமான கேள்வி, “கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கின்றதா? அவ்வாறு என்ன எல்லைப் பிரச்சினை இருக்கின்றது? என்பதாகும்.
 
தெளிவான, எல்லைகள் வரையறுக்கப்பட்ட கல்முனை நகரம் உத்தியோகபூர்வமாக 1897ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியிலேயே பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. இன்றுவரை எந்த எல்லை மாற்றமுமில்லாமல் அது அப்படியே தொடர்கிறது. கடந்த 125 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு வர்த்தமானியும் எல்லை மாற்றம் செய்து வெளிவரவில்லை.
 
இந்நிலையில் இந்த எல்லையைத்தான தமிழ்தரப்பினர் கூறுபோடக்கேட்கின்றார்கள். இது எந்த வகையில் நியாயம். ஏன் கல்முனை நகரில் சில தமிழர்கள் வாழ்கிறார்கள்; என்பதற்காகவா? அவ்வாறாயின் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழவே முடியாதா? அப்படியாயின் வட கிழக்கு பூராகவும் தமிழர்- முஸ்லிம் கலந்து வாழும் நகரங்களை எல்லாம் இனரீதியில் கூறுபோட தமிழ்த்தரப்பினர் தயாரா? 
 
ஏன் இந்தக் கேள்விகளை இந்த முஸ்லிம் தலைவர்களும் கல்முனையைச் சொல்லியே பாராளுமன்றம் செல்லும் உறுப்பினரும் இதுவரை எழுப்பமுடியவில்லை?
 
நியாயமே இல்லாத நிலையில் தமிழ்த்தரப்பினர் பாராளுமன்றில் கல்முனை விடயத்தில் குரல் எழுப்புகிறார்கள். பதில் வழங்க முஸ்லிம் தரப்பில் யாருமில்லை.
 
டளசுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கும் கல்முனைப் பிரச்சினையை நிபந்தனையாக முன்வைக்கிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்கும் கல்முனைப் பிரச்சினையை முன்வைக்கிறார்கள். தமிழர் பிரச்சினையின் இரண்டாம் இடத்தில் கல்முனைப் பிரச்சினையை தமிழ்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள். அந்தளவு முக்கியத்துவம். ஆனால் முஸ்லிம்களுக்காக இந்தப்பிரச்சினையை தெளிவாக பேசுவதற்குகூட யாருமில்லை.
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சகோ ரவூப் ஹக்கீம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள். கல்முனை விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் அவர்களது கல்முனை தொடர்பான அனைத்து வாதங்களுக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன்; எனக்கூறினேன். இன்றுவரை எந்த ஏற்பாடுமில்லை.
 
எனவே, முதலாவது சகோ ரவூப் ஹக்கீமும் கல்முனை பா உ வும் கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கிறது; என்று கூறுவதை நிறுத்தவேண்டும்.
 
நாளை வேண்டுமானாலும் தமிழர்கள் ஏனைய தமிழ் ஊர்களை உள்ளடக்கிய பிரதேச செயலகத்தைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தடையில்லை; என்பதை பகிரங்கமாக கூறவேண்டும்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, கல்முனையைக் கூறுபோட முஸ்லிம்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்; என்பதை அழுத்தம் திருத்தமாக உரத்துக்கூறவேண்டும். அதற்கு மேலே கூறப்பட்ட அடிப்படையில் நியாயங்களை முன்வைக்க வேண்டும். 
 
கல்முனைப் பிரச்சினை இன்னும் தீராமல் இருப்பதற்கு முஸ்லிம் தலைமைகளும் கல்முனைப் பா உ வுமே முழுக்க, முழுக்க காரணம் என்பதை அவர்களும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நியாயங்களை முஸ்லிம் தலைமைகளும் பா உ க்களும் பகிரங்கமாக பேச ஆரம்பிக்கத் தயாரா? இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாராளுமன்றிலும் அரச உயர்மட்டத்திலும் இவர்கள் இன்றிலிருந்தாவது போராடத்தயாரா?
“எல்லைப் பிரச்சினை” என்ற வாசகத்தை தயவுசெய்து கைவிடுங்கள். கல்முனை விடயத்தில் எந்த எல்லைப் பிரச்சினையும் இல்லை. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கல்முனைப் பிரச்சினையை இனியும் இழுத்தடிக்காதீர்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.