கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள்

மேல் மாகாணத்தில் உள்ள  பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து "விழிப்புணர்வு குழுக்களை" அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (28) கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இன்று (28) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அண்மையில் பெய்த மழையினால் கம்பஹா மாவட்டத்தில் பெருமளவிலான தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ சத்யானந்தவுக்கு அறிவுரை வழங்கினார்.

வெள்ளத்தால் தடைப்படும் கால்வாய்களை சுத்தப்படுத்த குறுகிய கால வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பல கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கான குறுகிய கால வேலைத்திட்டங்களின் கீழ் மாவட்ட செயலாளரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் ஜாரு கால்வாய், களுகொடுவ கால்வாய், குந்தி கால்வாய், களுகொல ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் மற்றும் பல்லேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனைத்து பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் கல்விக் குழுக்களை விரைவில் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சஹான் பிரதீப் விதான, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.