அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவக ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காக திறைசேரியில் இருந்து 1,232 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி இவ்விரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இவ்வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் சம்பளம் வழங்குவதற்கு 164 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

மேற்கூறிய இரண்டு நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமான கட்டுமான வேலைகளில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களாகும்.

கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட சூழ்நிலையானது கட்டிட நிர்மாணத்றையினை பாதிப்பதாக அமைந்தது. இந்த நிலை காரணமாக இரண்டு நிறுவனங்களும் தங்களது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டு ஊழியர்களுக்கான அடிப்படைச் செலவுகளை  மாத்திரம் ஈட்டிக் கொள்கின்ற அடிப்படையில் செயற்படுகிறது.

மேலும் கொவிட்-19 தொற்று நிலைமையின் போது நிர்மாணப் பொருட்களின் விலையில் அசாதாரண அதிகரிப்பு மற்றும்  பொதுத்துறையின் நிர்மாண நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகள் இவ்விரு நிறுவனங்களையும் மோசமாக பாதித்துள்ளதாக அமைச்சர் சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சால் வெளியிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் படி, மே மாதத்திலிருந்து படிப்படியாக இடைநிறுத்தப்பட்டு அனைத்து அரச திட்டங்களின் செயல்திறன் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திரங்கள் நிறுவனத்தின் திட்டங்களின் மூலம் வருமானம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாகவும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பல சந்தர்ப்பங்களில் அமைதியின்மை மற்றும் வேலைநிறுத்தம் ஏற்பட்டது.

எனவே, சம்பளம் வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  உரிய அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேசிய இயந்திரவியல் நிறுவனத்தை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழ் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.