நூருள் ஹுதா உமர்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து வருகைதந்த, கண் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்களினால் நடாத்தப்பட்ட கண் வைத்திய முகாம் இன்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.  

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பளார் டொக்டர்.ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்களின் சிபாரிசின் பேரில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து  இவ்வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கீழ் வருகின்ற கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி மற்றும் இறக்காமம் ஆகிய சுகாதார வைத்திய அலுவலக பிரிவுகளில் உள்ள கண் பார்வையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அறுபது வயதிற்கு மேற்பட்ட சுமார் 750 பயனாளிகள் சுகாதார வைத்திய அலுவலகத்தினால் பதிவு செய்யப்பட்டு இம்முகாமில் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வைத்திய முகாமை தொடர்ந்து, தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளவும் குறிப்பாக லென்ஸ் வைத்தல் சிகிச்சை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்முகாமில், இலங்கை தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர்.ஏ.ஆர்.எம்.தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.சி.எம்.மாஹிர், தேசிய கண் வைத்தியசாலை சிரேஷ்ட கண் வைத்திய மற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர்.  மானெல் பஸ்குவல், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர்.ஏ.எல்.எம்.அஜ்வத், வைத்திய அதிகாரி சனுஸ் காரியப்பர், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் அத்துடன் இன்னும் பல அதிதிளும் கலந்து கொண்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கீழ் வருகின்ற பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான கரையோர பிரதேசம், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, மல்வத்தை மற்றும் இறக்காமம் வரை அத்துடன் கல்முனை தொடக்கம் மத்தியமுகாமை வரையான பகுதிகளை உள்ளடக்கிய அம்பாறை மாவட்டத்தின் 13 சுகாதார வைத்திய அலுவலக பிரிவுகளில் பிரதேசங்களுக்கான தொற்றா நோய்களை கண்டறியும் மற்றும் பின்தொடர் சிகிச்சை சேவைகளை அளிக்கும் நிலையமாக (Centre for Excellence in Non Communicable Disease) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை நிறுவுவதற்கான முயற்சிகள் திணைக்கள மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்ட பணியாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து கண் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்கள் குழு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து வைத்திய முகாமை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.