மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 09 ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மற்றும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கஹட்டோவிட்ட MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த) முஸ்லிம் பாடசாலைகளில் இம்முறை 09ஏ சித்தி பெற்ற மாணவர்கள் தம்முடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

பாடசாலை அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் பெறுபேற்றை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தில் மாணவரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை  குறிப்பிட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். 

இந்நிகழ்வு எதிர்வரும் 2023 மார்ச் 02 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) கட்டடத்தில் நடைபெறும். 

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், 48/1, ஓகொடபொல வீதி, கஹட்டோவிட்ட.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.