நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை செலுத்தாமையால், கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் தொடர்பான கட்டணங்கள் சுமார் 5 மாதங்களாக செலுத்தப்படவில்லை என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.
இத்தொகையை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பல தடவைகள் அறிவித்தும் மின்சார சபைக்கு இது தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல வீதிகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.