#StrengthenMMDA அமைப்பு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நேற்று முன்தினம் (03) நீதி அமைச்சில் சந்தித்தது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்குத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய பரிந்துரைகளில் சமூகத்திற்கு இருக்கின்ற அதிருப்தி தொடர்பில் நீதி அமைச்சருக்கு தெரியப்படுத்துவதோடு, அந்த அறிக்கை தொடர்பாக இருக்கின்ற விமர்சனங்களையும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினைத் திருத்தம் செய்கின்ற போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதற்காகவும் இந்த சந்திப்பானது ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரில் 5 உறுப்பினர்களும் இணையவழியாக 5 உறுப்பினர்களும் என மொத்தமாக 10 உறுப்பினர்கள்  கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், 

முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய பரிந்துரைகளில்

1.எமது மார்க்கத்தினுடைய வழிகாட்டல்களுக்குப் புறம்பான திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. 

2. அதுபோல இந்த நாட்டிலே நீண்ட காலமாக நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற எமது சமூகத்தினுடைய உரிமைகளையும் அடையாளங்களையும் இல்லாமல் ஆக்கக்கூடிய வகையில் செய்யப்பட்டிருக்கின்ற  பரிந்துரைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டது. 

3. மேலும் செய்யப்படுகின்ற திருத்தங்களாவன ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை தருவது மாத்திரமல்லாமல் வேறு புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காதவையாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தங்களினால் தோன்றக்கூடிய புதிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேற்சொன்ன மூன்று அடிப்படையிலும் எமது சமூகத்திற்குப் பாதகமான விடயங்களை உள்ளடக்கி இருக்கின்ற, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் சட்டத் திருத்தமானது செய்யப்படக் கூடாது என்றும், அந்த அறிக்கையானது நிராகரிக்கப்பட வேண்டும் எனவும், குறித்த ஆலோசனைக் குழுவானது கலைக்கப்பட வேண்டும் எனவும் நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

அத்தோடு இந்தக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அறிக்கையானது பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தினுடைய அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு இந்த அறிக்கையானது பெரும்பான்மையான முஸ்லிம்களது அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது என்ற விடயமும் நீதி அமைச்சருக்கு எத்தி வைக்கப்பட்டது.

மேற்சொன்ன விடையங்கள் உள்ளடக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றும் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய அறிக்கை மீதான அதிருப்தியினை சமூகமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருப்பதால் காலந்தாழ்த்தாமல் இயலுமான ஜனநாயக வழிகளில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு #StrengthenMMDA அமைப்பு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.