கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளி பாத யாத்திரை வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதாத அல்விஸ் அவர்களின் பணிப்புரையின் பேரில், ஹட்டன்  குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும், ஹட்டன் பிரிவுக்குட்பட்ட ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் இணைந்து பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் ஸ்டௌட் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்தக் குழுவைக் கைது செய்தனர்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர், சிவனொளி பாத யாத்திரை  வரும் வாகனங்கள் மற்றும் யாத்திரிகர்களை சோதனையிட்ட போது கஞ்சா மது போன்ற பல்வேறு போதை பொருட்களுடன் யாத்திரை வந்த 25 இளைஞர்கள் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

 ஹட்டன் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் கைது செய்யப்பட்ட இவர்கள், காலி, சிலாபம் , மொனராகலை போன்ற பல்வேறு பிரதேசங்களில் இருந்து சிவனொளி பாத யாத்திரை வந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.