வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் மோசடியாக ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளுக்கு சுற்றுலா வீசாக்கள் மூலம் வேலைவாய்ப்பிற்காக அனுப்பிவைத்துள்ளதாகவும், பணியகம் விதித்துள்ள நிபந்தனைகளை மீறியமை, வேலைவாய்ப்பின் ஸ்திரத்தன்மை பற்றிய தகவல்களை வழங்காமை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களின் செயல்களினால் பணியகத்திற்கு தஞ்சம்புகுந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

 மேலும், விசாரணைகள் மற்றும் புகார்களுக்குப் பிறகு, ஏஜென்சி மற்றும் தொழிலாளர் சட்டங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியது உறுதிசெய்யப்பட்ட 13 ஏஜென்சிகளின் தொழிலாளர் உரிமங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.

 இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 அந்த காலப்பகுதியில் மாத்திரம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக 614 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 115 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.