5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இணையதள சேவை வழங்குநர்களால் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5G தொழில்நுட்பத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதேவேளை, தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் விதாதா தொழில்நுட்ப நிலையங்களை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது உறுப்பினர்கள் குழுவின் கவனத்தை ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சிக்கு கொண்டு சென்றதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஸ்ரீலங்கா டெலிகொம் கம்பனியின் இலாபம் 12 பில்லியன் ரூபாவாகவும் இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான இலாபம்  ரூபா 6 பில்லியன் எனவும் SLT அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 49.5 வீத உரிமையை அரசாங்கம் வைத்துள்ளதாகவும், நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால், அதே அளவு பங்குகளை தனியார் துறையும் வைத்திருக்கும் எனவும் ஸ்ரீலங்கா டெலிகொம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.