அரசாங்கம் முன்வைக்கும் சாதகமான விடயங்களுக்கு ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்றல்லாது ஆதரவு வழங்க வேண்டும். அதன் போது மட்டுமே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை தேடிக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது அரசாங்கத்தை மட்டும் குறைக்கூறி விமர்சனம் செய்வதால் எவ்விதத் தீர்வும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

தற்போது விமர்சனங்களை விட தீர்வுத் திட்டங்களே காலத்தின் தேவையாக உள்ளதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நகரம், கிராமம் மற்றும் பெருந்தோட்ட பகுதி என பார்க்கின்ற போது, பெருந்தோட்ட பகுதிகளின் வறுமை நிலை உக்கிரம் அடைந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் விமர்சனங்களை விட தீர்வு திட்டங்களே காலத்தின் தேவையாக உள்ளன. இன்று நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் உணவு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்நிலைமை இரண்டில் ஒரு பகுதியினராக உள்ளது. உணவு பற்றாக்குறை மற்றும் போஷாக்கின்மை நிலைமை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமையின் தொடர்ச்சியான தன்மை பாரிய சமூக பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. முழு நாட்டிலும் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை பிரச்சினையை விட அதிகமான தாக்கம் மலையக பெருந்தோட்ட பகுதிகளிலுள்ளது. பாடசாலை மாணவர்களின் வருகையிலும் இத்தாக்கத்தை காண முடிகின்றது. இப் பிரச்சினையை நாம் மூடி மறைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று தீரும் நாளை தீரும் என காலத்தை இழுத்தடிக்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி விமர்சனம் செய்வதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

எனவே தற்போது ஜனாதிபதி முன்வைத்திருக்கும் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு அப்பால் சென்று மலையக பிரதேசத்துக்கான விசேட திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதற்கான அரச மட்ட பொறிமுறையொன்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

தினகரன் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.