உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய கும்பலுக்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹஷீமின்  மனைவி பாத்திமா ஹாதியா, சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சியங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்காமை தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு  தகவல் அறியும் உரிமை ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது. 

எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி இது குறித்து விளக்கமளிக்குமாறு  ஆணைக்குழு பாராளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர,  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன,  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா,  கபூர் மாமா, நெளபர் மெளலவி ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்கள் குறித்து விசாரித்த  ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு வழங்கிய  சாட்சியங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்  தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் தரிந்து  ஜயவர்தன  முன் வைத்துள்ள தகவல் கோரிக்கை தொடர்பில், தகவல்கள் வழங்கப்படாமையினால், அது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டின் போதே எழுத்து மூலம் விளக்கமளிக்க பாராளுமன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.என்.எப். பஷீர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.