கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இந்த நாட்களில் 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தாய் விலங்குகள் இல்லாத காரணத்தினால் முட்டை தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு காரணமாகவே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் விலங்குகள் பற்றாக்குறையால் குஞ்சு ஒன்றின் விலை 500 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 90% சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டைத் தேவையில் 40% க்கும் அதிகமானவை சிறு மற்றும் நடுத்தர பண்ணைகளால் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நெருக்கடி காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணை உரிமையாளர்கள் தற்போது நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10% முட்டைத் தேவையை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த தேவையில் 30% கோழி இறைச்சி சிறிய மற்றும் நடுத்தர பண்ணை உரிமையாளர்களால் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்தளவு தற்போது 20% ஆக குறைந்துள்ளதாகவும், மேலும் இந்தத் தொகை எதிர்காலத்தில் மேலும் குறையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போதைய சூழ்நிலையில் பெரிய அளவிலான பண்ணை உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களால் மட்டுமே கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படுவதாகவும், இதன் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தட்டுப்பாடு காரணமாக கோழிக்கறியின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாகவும், மேலும், முட்டை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.